நாங்கள் அனைவருமே, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வேலை தேடி ஓசூர் வந்து, இங்கு அமைந்துள்ள பல தனியார் நிறுவனங்களில், தொழிலாளிகளாக இன்றும் வேலை பார்த்து வரும் சாதாரண தொழிலாளிகள்தான்.
வேலை தேடி ஊர் விட்டு ஊர் வந்த நன்றாக சம்பாதிக்கும் நாங்கள், நம்மால் முடிந்த ஏதாவது ஒரு நல்ல விசயத்தை சமுதாயத்திற்குச் செய்ய வேண்டும் என முடிவெடுத்து ஓசூர் (சிப்காட்-2) நுகர்வோர் பாதுகாப்புக் குழு என்ற பெயரில் சங்கத்தை 15-08-1998 இல் அமைத்து உள்ளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நுகர்வோர் தொடர்பான களப்பணிகளை மட்டுமே ஆற்றி வந்தோம்.
2001 ஆம் ஆண்டில்தாம், எதிர்பாராத விதமாக, 2000 ஆம் ஆண்டில் தனது சட்ட ஆராய்ச்சியை தொடங்கி 2010 இல் ஆராய்ச்சியை முடிக்கும் நோக்கோடு, சென்னையில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த நீதியைத்தேடி... என்ற சட்ட விழிப்பறிவுணர்வு மாத இதழின் இணை ஆசிரியரும், சட்ட ஆராய்ச்சியாளரும் ஆன திரு. வாரண்ட் பாலா அவர்களின் அறிமுகம் கிடைத்தது. இவர் மூலம் திரு.செந்தமிழ்க்கிழார் என்பவரின் அறிமுகமும் எங்களுக்கு கிடைத்தது.
அதுவரை நுகர்வோர் விழிப்புணர்வே பிரதானம் என்ற நிலையில் இருந்த நாங்கள், ‘‘ஒட்டு மொத்த சட்ட விழிப்பறிவுணர்வே பிரதானம் என்ற தெள்ளத் தெளிவான நிலைக்கு வந்தோம்’’.
இதன் அடிப்படையில் சங்கத்தின் பெயரை Consumer Awareness and Rural Education Society என்று 2005 ஆம் ஆண்டில் மாற்றி அமைத்தோம். இதன் சுருக்கம்தான் கேர் சொசைட்டி - CARE Society ஆகும். இதன் பிறகே இத்தளத்தை உருவாக்கி, திரு.செந்தமிழ்க்கிழாரை திறக்க வைத்தோம்.
ஆனால், 2006 ஆம் ஆண்டில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 19 இல், ‘‘நீதிபதி’’ என்பதில் ‘தனி நபரும் அடங்குவர்’ என்று சொல்லப்பட்டுள்ள கருப்பொருளின்படி திரு. செந்தமிழ்க்கிழார், ‘‘தன்னைத்தானே இந்தியாவின் தலைமை நீதிபதி, சிறப்பு நீதிபதி என்றும், குடியரசுத் தலைவர் என்றும், தான் சொல்வதே சட்டம் என்றுகூறி உண்மையான சட்டங்களை எல்லாம் திரித்து எழுதி, சட்டங்குறித்த அடிப்படை அறிவில்லாத மக்களை பைத்தியக்காரர்கள் ஆக்கினார்’’.
இதன் விளைவாக 2010 ஆம் ஆண்டில், சென்னையில் போலி நீதிபதி கைது என்று அனைத்து ஊடகங்களின் தலைப்புச் செய்திகளிலும் இடம் பிடித்தார்.
மேலும், சட்ட ஆலோசனை கேட்டு வந்தவர்களின் வழக்கு விபரங்களையும், அவ்வழக்கு குறித்த ஆவணங்களை வாங்கி, அவ்வழக்கை உண்மையில் விசாரணை செய்யும் நிதிபதிக்கு கண்டபடி கடிதம் எழுதுவார் அல்லது அந்த வழக்கில் தான் தீர்ப்பு எழுதி விட்டதாக கூறி, இவர் எழுதிய தீர்ப்பை அந்த நிதிபதிக்கு அனுப்புவார்.
இதனால், கடுப்பான நிதிபதிகள் அவ்வழக்கு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக செயல்பட்டனர். அவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக இருக்கும் பட்சத்தில், அதிகபட்ச தண்டனையை விதித்தனர். இப்படி, எங்களுக்கு தெரியவே இவரால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.
கூடவே, சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாது, நீதிபதி உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு ஆசைப்பட்ட வாசகர்கள் சிலரையும் சிக்க வைத்தார். ஆகையால், எச்சரிக்கை!
கூடவே, சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாது, நீதிபதி உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு ஆசைப்பட்ட வாசகர்கள் சிலரையும் சிக்க வைத்தார். ஆகையால், எச்சரிக்கை!
முன்பாக, சட்டத்தில் மிகுந்த தெளிவுடைய திரு.வாரண்ட் பாலா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கூட, திரு.செந்தமிழ்க்கிழார் தன்னைத் திருத்திக் கொண்டு, சட்டத்துக்கு உட்பட்ட வகையில் கடமையாற்ற முன் வராத காரணத்தால், வேறு வழியின்றி திரு.வாரண்ட் பாலா அவர்களுடன் மட்டும் இணைந்து நாங்கள் செயல்பட ஆரம்பித்தோம்.
சட்ட விழிப்புணர்வுக்கு மத்திய சட்ட அமைச்சகம் நிதி ஒதுக்குவது குறித்து அறிந்து அதற்கு விண்ணப்பித்ததில், நீதியைத்தேடி... இதழை தமிழ்நாடு முழுவதும் உள்ள பொது நூலகங்களுக்கு வழங்க, முதல் முறையாக 2006 இல் ரூ-15,000 ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஒரு மாத இதழை நூலகங்களுக்கு கொடுப்பதால், எவ்வித சட்ட விழிப்பறிவுணர்வும் சமுதாயத்தில் ஏற்பட்டு விடாது என்று தீர்க்கமாக நம்பிய திரு.வாரண்ட் பாலா, தனது பத்து வருட ஆராய்ச்சி திட்டப்படி நீதியைத்தேடி... இதழ்களின் தொகுப்பாக, அதே நீதியைத்தேடி... தலைப்பில், நூலாக வழங்கலாம் என்கிற முடிவுக்கு வந்தார்.
மேலும், அதற்கு தேவைப்படும் கூடுதலான தொகை சுமார் 50,000 ஐ தானே, பிச்சை எடுத்தாவது செய்து விட வேண்டும் என்றும் முடிவு செய்து, அதற்கான களப்பணியில் இறங்கினார். நல்ல வேளையாக மக்கள் இவரை பிச்சை எடுக்கும் நிலைக்கு கொண்டு செல்லவில்லை.
இவரது வழிகாட்டுதலில் தனக்குத்தானே வாதாடி தனது நியாயத்தை தக்க வைத்துக் கொண்டவர்களை, இவரே நேரடியாக அனுகி நன்கொடை கோரிய போது, ஒரு சிலரைத் தவிர பலரும் தந்ததால், அவரது அதிரடித் சட்ட விழிப்பறிவுணர்வுத் திட்டம் வெற்றிகரமாக ஆரம்பமாகி, அடுத்தடுத்த ஆண்டுகளிலும் அதே வேகத்தில் முடிந்தது.
நன்கொடை தந்தவர்களில், வாசகர்கள் மட்டுமல்லாது காவலூழியர்கள், பொய்யர்கள் மற்றும் நிதிபதிகள் உண்டு என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்! எனவே, நமது இச்சட்ட விழிப்பறிவுணர்வுத் திட்டம், இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்பதே இயற்கையின் திட்டம் போலும்!!
இப்படி, இந்தியாவில் இதுவரை யாருமே செய்திராத வகையிலான, எங்களின் (நமது) சிறப்பான சட்ட விழிப்பறிவுணர்வுக் கடமையால், சட்ட மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதியுதவி 2007 இல் ரூ-30,000 ஆகவும், 2008 இல் ரூ-40,000 ஆகவும், 2009 இல் ரூ-30,000 ஆகவும், 2010 இல் ரூ-60,000 ஆகவும் கூடியது.
திரு. வாரண்ட் பாலா அவர்களும் சுமார் இரண்டு, மூன்று மடங்கு பணத்தை நன்கொடையாக வசூல் செய்து, தான் திட்டமிட்டிருந்த ஐந்து நூல்களையும் எழுதி சமுதாயத்திற்கு பொதுவுடைமையாக அர்ப்பணித்து உள்ளார் என்பதையும் பெருமையுடனும், பணிவுடனும் தெரிவிக்க கடமைப் பட்டுள்ளோம்.
உங்களது கடமை முடிந்ததும், அதனை நாங்கள் தொடருவோம் என திரு. வாரண்ட் பாலா அவர்களிடம் கூறிவந்த வாசகர்கள் யாராவது, அவரது பணியைச் செய்ய முன்வருவார்கள் என எண்ணியிருந்தோம்.
ஆனால் அவர்களோ ‘‘அண்ணன் எப்போ சாவான்; திண்ணை எப்போது காலியாகும்’’ எனக் காத்திருந்ததுபோல உற்சாகமடைந்தனர். நாங்களும் மூட்டை கட்ட வேண்டியதுதான் என எங்களிடமே சிலர் கூறினர்.
மேலும், தங்களை சட்ட ஆர்வலர்கள் அல்லது ஆராய்ச்சியாளர்கள் என கூறிக்கொண்டு கூட்டமாக கூடி, பொய்யர்களுக்கு வழக்குகளைப் பிடித்து தரும் இடைத்தரகர்களாகவும், அப்பொய்யர்கள் எழுதிய ஒன்றுக்கும் உதவாத நூல்களை விற்பனை செய்யும் இடைத்தரகர்களாகவும் மாறி மக்களை ஏமாற்றி பணத்தை சம்பாதிக்கும் திருட்டுக் கூட்டமாக திரிந்தார்களே ஒழிய, உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. இப்பவுங்கூட, இதே நிலையில்தான் இருக்கிறார்கள். ஆகையால், எச்சரிக்கை!
இந்த நிலையில்தான் இயற்கை மீண்டும் நமது சட்ட விழிப்பறிவுணர்வை தொடரும் விதமாக, 2013 ஆம் ஆண்டில் மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தை நாம் நிதி கேட்காமலேயே, அவர்களாகவே அழைத்து ரூபாய் 25, 000 நிதியைக் கொடுத்து நூலொன்றை வெளியிடக் கோரினர்.
அரசிடம் கேட்டாலே கிடைக்காத நிதி, நாம் கேட்காமலேயே நம்மைத் தேடி வருகிறது என்பது, நாம் செய்த கடமைக்கு உ(ய)ரிய பலன்தானே!
ஆகையால், இதனை ஏற்றுக்கொண்ட திரு. வாரண்ட் பாலா அவர்கள், 2007 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை எழுதி வந்த ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ இருமாத இதழை தொகுத்து நூலாக எழுதித்தர முன்வந்து, வழக்கம்போலவே நல்ல உள்ளங்களின் பொதுநிதியைப் பெற்று 2014 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக முடித்து தந்தார்.
மீண்டும் நாங்களே ‘‘மநு வரையுங்கலை!’’ நூலுக்கு நிதிகேட்டு விண்ணப்பித்ததில் 2015 ஆம் ஆண்டில் ரூபாய் 70, 000 ஒதுக்கப்பட்டது. நமக்கு இதுவரை ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவே அதிகபட்சமாகும்
இதற்கு ஏற்றார்போல, மநு வரையுங்கலை! நூலை 768 பக்கங்களைக் கொண்ட மிகப்பெரிய நூலாக எழுதியும், வழக்கம் போலவே நன்கொடை வசூலித்தும் வெளிக்கொண்டு வந்துள்ளோம்.
மொத்தத்தில், திரு. வாரண்ட் பாலா அவர்கள் எழுதியுள்ள ஏழு நூல்களும் எங்களால் வெளியிடப்பட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள சுமார் 4000 பொது நூலகங்கள், 1500 காவல் நிலையங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் 700 நீதிமன்றங்கள் என அனைத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
உங்களின் அவசிய மற்றும் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இந்த ஏழு நூல்களையும் உரிய நன்கொடை செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும். மேலும், இந்நூல்கள் உங்களுக்கு பயனில்லை என்னும் பட்சத்தில் அதனை திருப்பி அனுப்பிவிட்டு, செலுத்திய நன்கொடையில் அனுப்பிய செலவுபோக மீதியைப் பெற்றுக் கொள்ளவும் அனுமதிக்கிறோம்.
எனவே, இந்நூல்களை உங்களது பகுதியில் உள்ள நூலகத்தில் படித்து சட்ட விழிப்பறிவுணர்வைப் பெறுங்கள். அங்கு, முதல் நூலிலிருந்து வரிசையாக படிக்க கிடைக்கவில்லை எனில், எவ்வித அச்சமும் இல்லாமல் எங்களிடம் வாங்கிக் கொள்ளுங்கள்.
உற்றார், உறவினர், நண்பர்கள் என பலருக்கும், இதுகுறித்து எடுத்துச் சொல்லுங்கள். எங்களின் இந்த சட்ட விழிப்பறிவுணர்வு சேவையில் நீங்களும் உங்கள் கடமையை ஆற்றிட அன்போடு அழைக்கின்றோம்.
உற்றார், உறவினர், நண்பர்கள் என பலருக்கும், இதுகுறித்து எடுத்துச் சொல்லுங்கள். எங்களின் இந்த சட்ட விழிப்பறிவுணர்வு சேவையில் நீங்களும் உங்கள் கடமையை ஆற்றிட அன்போடு அழைக்கின்றோம்.
எங்களின் முகவரி; கேர் சொசைட்டி, 53 ஏரித்தெரு, ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா-635109.
0 comments:
Post a Comment