இவன் இதை கண்டு பிடித்தான், அவன் அதை கண்டு பிடித்தான் என பல செய்திகள் பரவலாக உலா வருவதை பார்க்கிறோம். அவர்களுக்கு பாராட்டையும் தெரிவிக்கிறோம். சிலர் ஊக்குவிக்கிறேன் என்று நிதியுதவியும் செய்கிறார்கள்.
ஆனால், அதற்குப் பிறகு, அந்தக் கண்டுப் பிடிப்புகள் என்ன ஆகுது; பரவலான நடைமுறைக்கு வருகிறதா என பார்ப்பதில்லை. அதற்கெல்லாம் நேரமும் இல்லை. ஆனால், இதுபற்றி நான் பலமுறை யோசித்தது உண்டு.
ஆமாம், நடைமுறைக்கு வந்திருந்தால், பெட்ரோலுக்கு பதில் தண்ணீரில் ஓடும் வண்டி உட்பட எத்தனை எத்தனையோ அதிசய நிகழ்வுகள் நடந்திருக்க வேண்டும்.
ஆனால், இறுதியில் எல்லாமே மூலிகை பெட்ரோல் தயாரிப்பில் மோசடி செய்த இராமர் பிள்ளை போல் ஆகி விடுகிறது என்பதற்கு, இதுவும் நல்லதொரு உண்மை சம்பவம்.
இப்படித்தான், ஓரிரு வாரங்களுக்கு முன்பு தந்தி தொல்லைக்காட்சியில், திருச்சி ஸ்ரீரங்கம் டோல்கேட்டை சேர்ந்த அக்தர் அலி என்பவர் கோடை வெப்பத்தை தணிக்கும் இயற்கையான வாட்டர் கூலர் ஒன்றை கண்டு பிடித்து இருப்பதாக செய்தி வெளியிட்டார்கள்.
இவர் இதற்கு முன்பாக பஞ்சர் ஆகாத பவுடர், டியூப் இல்லாத டயர் என கண்டு பிடித்து இருக்கிறார் என்றும் தகவல்.
இந்த இயற்கையான வாட்டர் கூலர் செய்தியை நம்பிய நம் வாசகர் ஒருவர், ‘‘ஆஹா வெப்பத்தின் வேக்காட்டில் இருந்து தப்பித்து, இனி நிம்மதியாக இருக்கலாம்; தூங்கலாம்’’ என்ற பகல் கனவோடு, அவருக்கும் எனக்கும் சேர்த்து இரண்டை வாங்கி வந்தார்.
இதனை கண்டு பிடித்ததாக சொல்லும் அக்தர் அலி, வைத்துள்ள பெயர் ஈசி. அதாவது ஏசி என்பதை ஈசியாக்கி (எளிதாக்கி) விட்டாராம்!
அதிலுள்ள பொருட்கள்: படத்தில் உள்ளதுதான்.
அதாவது ஒரு பழைய வாட்டர் கேன். அதிகபட்ச விலை 100.
மீன் தொட்டிகளில் ஓடக்கூடிய யூஸ்அன் துரோ சைனா 15 வோல்ட் சிறிய மோட்டார் அதிகபட்ச விலை 200.
குறிப்பு: மோட்டார் இப்படிப்பட்டதுதான் என்பதை முன்பே சொல்லவில்லை. இதுவே கம்பெனி தயாரிப்பு என்றால் குறைந்தது 1000 க்கு மேல் ஆகுமாம்.
சிறிய மூங்கில் கூடை அதிகபட்ச விலை 100.
வெட்டிவேர், இரப்பர் குழாய்கள் உள்ளிட்ட இதர பொருட்களுக்கு அதிகபட்ச விலை 100.
செய் கூலிக்கு என 300 கொடுக்கலாம். மொத்தம் 800 க்கு ஊக்குவிப்பதற்காக 1000 ரூபாய் கூட கொடுக்கலாம்.
ஆனால், அவரோ பேராசையின் காரணமாக ஒன்றுக்கு 1500 வீதம் 2 க்கும் 3000 வாங்கி விட்டார். ஆனால், இதனை செய்து தருமாறு கேட்ட போதே அவர் சொன்னதுதான்; ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் இவராலும் ஒப்புக் கொண்ட தொகைதான்.
போக்குவரத்து செலவுக்கு 1000 ஆகி விட்டது. மொத்தத்தில் இவருக்கு நான்காயிரம் செலவு.
இதில் போக வர என ஒருநாள் வீண் பயணம். இந்த நேரத்தில் வேறு வேலை பார்த்து இருந்தால், அவருக்கு 1000 வருமானம் கிடைத்திருக்கும்.
வருமானம் இல்லை என்றாலுங்கூட, நல்ல ஓய்வில் நிம்மதியாக இருந்திருக்கலாம்.
மொத்தத்தில், இவருக்கு நட்டம் 5000. கூடுதலாக வீண் அலைச்சலும், மன உலைச்சலும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து வாங்கிய பரிசு.
அதனை வாங்கி வந்து ஓட விட்டால், அம்மோட்டார் ஓடும் அதிர்வின் காரணமாக, அது தானாகவே பொசிசன் மாறி ஐந்து நிமிடத்தில் மோட்டார் நின்று விடுகிறது.
இதனை இயக்கி விட்டு, அவனவன் வேலையைப் பார்ப்பானா அல்லது தூங்குவானா அல்லது மோட்டார் நிற்காமல் ஓடுகிறதா என்று அருகில் அமர்ந்து பார்த்து, அவ்வப்போது சரி செய்துக் கொண்டே இருப்பானா?
அதிகபட்சமாக இருமணி நேரம் ஓடியுங்கூட, சாதாரண மண் பாணையில் இருக்கும் தண்ணீர் அளவிற்கு கூட குளிர்ச்சி இல்லை.
இந்த குளிர்ச்சியை நமக்கு கிடைக்கச் செய்ய பவர்புல் பேன் ஒன்றை அதில் படும்படி ஓட விட வேண்டுமாம். இதனை எல்லாம் தொல்லைக் காட்சி பேட்டியில் சொல்லவில்லை. சொன்னால், வியாபாரம் எப்படி நடக்கும்?
அதாவது, என்ன நடக்கிறது என்றால், கேனில் உள்ள நீரை, நீரில் உள்ள மோட்டாரில் பொருத்தப்பட்டு உள்ள குழாயின் வழியாக மேலேயுள்ள மூங்கில் கூடைக்கு கொண்டு வந்து, அதிலுள்ள வெட்டி வேரை நனைத்து மீண்டும் கேனுக்குளே ஊற்றுவதே தொடர்ச்சியாக நடக்கிறது.
மூங்கில் கூடைக்குள் வெட்டி வேருடன், சிறிய கூழாங்கற்கள் சில போடப்பட்டு உள்ளன. அவ்வளவே!
இந்த சுழற்சி தொடர்ந்து நடைபெறுவதால் தண்ணீர் எப்படி குளிர்சியாகும் என்று கேட்டால், மூங்கிலும், வெட்டி வேரும், கூழாங்கல்லும் குளிர்ச்சியான பொருட்களாம். ஆகையால், இவை அனைத்தும் சேர்ந்து ஏற்படுத்துகிறதாம்!
சரி, ஒரு பேச்சிக்காக கொஞ்சம் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்றே வைத்துக் கொண்டாலுங் கூட, இது எப்படி அடிக்கும் 100 - 110 டிகிரி வெய்யிலின் வெப்பத்தை தணிக்கும்??
இந்த சிற்றறிவு கூட இல்லாமல், இதையெல்லாம் கண்டு பிடிப்புகள் என பிதற்றுகிறார்கள் என்றால், இவர்கள் எல்லாம் காசு சம்பாதிப்பதற்கான காரிய வாதிகளே என்று சொல்லதை தவிர, எனக்கு வேறு வார்த்தையில்லை.
இப்படி ஒரு பொருளை வீட்டுக்கு வாங்கி வந்து பரிசோதித்து பார்க்கும் வரை இந்தப் பிரச்சினைகள் எல்லாம் நமக்கு தெரிய வருவது இல்லை.
இதுக்கு பதிலா நல்ல ஜமுக்காளம் அல்லது கம்பளியை நனைத்து சாதாரணமாக தூங்கும் அறையில் காய போட்டு விட்டால், மின் விசிரியின் காற்று அதில் பட்டு குளிர்ச்சியை தருமே!
மொத்தத்தில் வேலை வெட்டி இல்லாத தொல்லைக் காட்சி காரனுங்க, அந்த ஏரியா நிருபருங்க தங்களுக்கு கிடைக்கும் விளம்பரம் அல்லது அற்பத்தனமான பிச்சை சில்லரை காசுக்காக இப்படி அந்தக் கண்டு பிடிப்பு, இந்த கண்டு பிடிப்பு என எதையாவது செய்தியாக போட அதை நம்பி மக்கள் ஏமாந்து வீணான மன உலைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
ஆமாம், இப்படி இவர் வாங்க சென்றிருந்த நேரத்தில் வேறு சிலரும் தங்களுக்கும் வேண்டுமென கேட்டு உள்ளார்கள். அதே நேரத்தில் வேறொரு தொல்லைக் காட்சியில் இருந்தும் அவரை பேட்டி காண வந்திருக்கிறார்கள்.
நேரில் வந்த மாணவ மாணவிகள் இதை எப்படி செய்வது என வினவிய போது, இது என்னமோ கம்ப சூத்திரம் போல, ‘‘நீங்களெல்லம் செய்ய முடியாது. ரொம்ப கஷ்டம். பொருட்கள் எல்லாம் வீணாகி விடும். நானே செய்து தருகிறேன்’’ என்று கொள்ளை அடிக்கும் நோக்கோடு சொல்லி இருக்கிறார்.
உண்மையில், இதற்கான எல்லாப் பொருட்களையும் வைத்திருந்தால், ஒரு மணி நேரத்தில் நானே செய்து விடுவேன். நீங்களும் செய்யலாம். எப்படி செய்ய வேண்டுமென்ற வழிமுறையையும் எழுதி இருப்பேன். ஆனால், செய்தும் பயனில்லாத போது எதற்காக வீணாக எழுத வேண்டும்?!
‘‘ஒருவனை ஏமாற்ற வேண்டுமென்றால், முதலில் அவனுக்கு ஆசையை தூண்ட வேண்டும்’’ என்ற வாசகத்தை நாம் நம் வசதிக்காக மறந்தால் நட்டம் நமக்கே.
இறுதியாக, இந்த கூலர் சொன்னபடி வேலை செய்யவில்லை. ஆகையால், எனக்கு தேவையில்லை என திருப்பி கொடுத்து வர முடிவு செய்து இருக்கிறார்.
இதுக்காக வாங்கிய 3000 பணத்தை திருப்பித்தந்தால் 3000 நட்டம். இல்லையெனில் 6000. என்ன செய்வாரோ?!
எனவே, புதிதாக கண்டுப் பிடித்து இருப்பதாக சொல்லும் எதிலும் எச்சரிக்கையாய் இருங்கள். அவ்வளவே!
முக்கிய குறிப்பு: இப்படியொரு புது கண்டு பிடிப்பை இவ்வாசகரைப் போல வாங்கியே ஆகவேண்டும் என்ற நிலை இருந்தால், இதற்கு முன்பாக வாங்கியவர்கள் யாராவது இருக்கிறார்களா என கேட்டு அவர்களின் தொடர்பு எண்ணை வாங்கி, அவர்களுடன் பேசி முடிவெடுப்பது நல்லது.