சட்டப்படி, நாம் எழுத நினைக்கும் ஆவணங்களை கையால் எழுதுவதே சிறந்தது. இப்படி எழுதிக் கொடுத்தாலே போதுமானது தான். ஏன் தட்டச்சு செய்யவில்லை யென யாரும் கேள்விகேட்க முடியாது. ஏனெனில், தட்டச்சு செய்துதான் கொடுக்க வேண்டு மென எந்தச் சட்டமும் சொல்ல வில்லை.
ஆனால், இதிலுள்ள ஒரேயொரு பொது நிபந்தனை என்னவென்றால், நம் கையெழுத்து சாதாரணமாக எல்லோர்க்கும் புரியும் வகையில் இருக்க வேண்டும். அவ்வளவே!
ஒரு ஆவணம் முழுமையாக கையால் எழுதப்படும்போது, அதனை நான் எழுதவில்லை என எழுதியவர் ஒருபோதும் மறுக்கமுடியாது. ஆனால், அதையே தட்டச்சு செய்து, கையொப்பமிடும் போது, மறுக்கமுடியும்.
அப்படி மறுக்கப்பட்டால், அவர்தான் எந்த கையொப்பத்தை இட்டார் என்பதை தகுந்த சாட்சிகளின் மூலமோ அல்லது வேறு ஆவணங்களின் மூலமோ அல்லது அறிவியல்பூர்வமான சோதனைக்கு உட்படுத்தி யோதான் நிரூபிக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். இதற்கு கால விரயமும், பொருளாதாரமும் செலவாகும்.
இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில்தான், அந்த ஆவணத்தில் ஒப்பமிட்டுள்ள சாட்சிகள், சூழ்நிலைக்கு ஏற்ப, உண்மையைச் சொல்ல, நம்மிடம் தகுந்த பிரதிபலனை எதிர் பார்த்து நிர்ப்பந்திப்பார்கள். தப்பித்தவறி, சாட்சிகள் உண்மையைச் சொன்னாலுங்கூட, சாட்சி பொய் சொல்கிறார் என்றுங்கூறி, காலத்தை கடத்த முற்படுவார்கள்.
இதுபோன்ற நிர்பந்தங்களை தடுக்கும் வகையில், தரப்பினர்களும், சாட்சிகளும் பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு நேரடியாக வரவைத்தும், ஒளிப்படம் எடுத்துக்கொண்டு, ஒப்பமிட கர்நாடகா போன்ற சிலமாநிலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது, ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும் நூலில், மதிப்புள்ள காப்பீட்டின் மகிமை’’ என்ற தலைப்பில், சொல்லியுள்ள பத்திரப்பதிவை செய்தபோதுதான் தெரிந்தது.
ஆனால், இதுபோன்ற வழிமுறை தமிழ்நாட்டில் சாட்சிகளுக்கு இதுவரை பின்பற்றப்பட வில்லையென்றே தெரிகிறது. எது எப்படியிருந்தாலும், அரசையோ அல்லது மற்றவரையோ எந்விதத்திலும் நம்பியிராமல், நம்மைநாமே உ(ய)ரிய வழியில் தற்காத்துக் கொள்வதுதானே நல்லது.
இதன் பிறகு, காரைக்காலில் பத்திரம் எழுதும் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. வில்லங்கம் நிறைந்த, ஒரு சொத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக வைத்திருந்தபோது, எதேச்சையாக எடுத்து படித்துப்பார்த்தேன். முக்கியமான இடத்தில், என்னச்சொல்ல வருகிறார் என்பதே புரியவில்லை. அதுகுறித்து அவரிடம் கேட்டபோது, தங்களது தொழில் தர்மப்படி, இப்படிதான் புரியாமல் குழப்பி எழுதவேண்டும் என்றார். பிறகுதான் தெரிந்தது, அவரது அண்ணன் பொய்த்தொழில் செய்பவரென்று. ஆக, இரண்டுபேரின் பிழைப்பும் இப்படித்தான் ஓடுகிறது!
பத்திரங்களை பத்திரப்பதிவாளர்கள் மட்டுமேதான் எழுதவேண்டும் என்று எந்த சட்டமும் சொல்லவில்லை. நமக்கு நாமே வாதாடுவதைப் போலவே, எதுவொன்றை எழுதுவதும், நம் அடிப்படை உரிமை யாகையால், நாமே எழுதிக்கொள்ளலாம். மற்றவர்களுக்கும் வழிகாட்டி அறிவுறுத்தலாம்.
தொழில்முறை பத்திரப்பதிவாளர்கள், எந்த தைரியத்தில் இப்படி குழப்பியெழுதுகிறார்கள் என்றால், அதுதொடர்பான வழக்குகளில், அப்பத்திரத்தை எழுதியவரென்ற முறையில், வழக்குத்தரப்பினர்கள் எவருமே, அவர்களை எதிர்மனுதாரராகவோ அல்லது முக்கிய சாட்சியாகவோ கூட அழைத்து விசாரணை செய்து, குளறுபடிகளுக்கு பொறுப்பேற்க வைத்து நிவாரணம் கோருவதில்லை என்பது மட்டுந்தான் காரணமேயொழிய, வேறொன்றுமில்லை!
உயிர்களின் பந்தமும், மனிதர்களின் நிர்ப்பந்தமும்!
உயிர்களின் பந்தமும், மனிதர்களின் நிர்ப்பந்தமும்!
இந்த உலகில், மற்ற உயிரினங்களைப்போல, மனிதர்கள் பந்தத்தோடு வாழ முற்படுவ தில்லை. மாறாக, ஏதோவொரு வகையில், மற்றவர்களை நிர்பந்தப்படுத்தி வாழவே முற்படுகிறார்கள்.
இந்த புரிதல் இல்லாத வெகுசிலர் தானே வலியபோய் நிர்பந்தத்தில் சிக்கிக்கொண்டு, மீள்வதுமுண்டு. இப்படி, மகாத்மா காந்தியேகூட, தன் அண்ணனுக்காக பரிந்து பேசப்போய், நிர்பந்தத்திற்கு ஆளாகி, அனுபவப்பட்ட பின்னரே மீண்டிருக்கிறார்.
இப்படி, ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில், நிர்பந்தத்திற்கு அடிபணிவதால்தான், தங்களின் கடமையில் தவறி, தவறு செய்கிறார்கள் என்பது குறித்து, ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும் நூலில், இப்படி… ஏன்… எப்படி?!’’ என்ற தலைப்பில், புரிந்துகொள்ளப் போதுமான அளவிற்குச் சொன்னது நினைவிருக்கும். ஆனால், இந்தக் கொள்கையை எத்தனைபேர், தார்மீக அடிப்படையில் கடைப்பிடிக்கிறீர்கள் என்பதுதான் தெரியவில்லை.
எனவே, எச்சச்சரவுக்கும் இடமில்லாத வகையில், சாட்சிகளே இல்லாத அளவிற்கு அல்லது சாட்சிகள் இருந்தாலும், அவர்கள் எவ்வகையிலும் நம்மை நிர்பந்திக்கமுடியாத அளவிற்கு ஆவணங்களை தயார் செய்வதே இருதரப்புக்கும் புத்திசாலித்தனமாகும்.
இந்த நோக்கத்திற்காக, எந்தவொரு ஆவணத்திலும், ஆளுக்கொரு பத்தியென்ற முறையில் தொடர்புடைய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோரின் கையெழுத்திலேயே அந்த ஆவணத்தை தாராளமாக எழுதலாம்.
இப்படியெழுதி விட்டால், எழுதியவர்களில் எவரும் பிற்காலத்தில் எந்தவிதமான தகராறும் செய்யமுடியாது என்பதோடு, அவர்களின் வாரிசுகளும் கூட செய்யமுடியாது என்பதால் நாம் மட்டுமன்று; நமது எச்சந்ததிகளும் நீதிமன்றங்களுக்கு போகாத சூழ்நிலையை, நாமே மிக உறுதியாய் இப்பொழுதே கட்டமைத்து காத்துவிடமுடியும் என்பதோடு, அதர்மமான பொய்யர்களின் தொழில் தாமேயொழிந்து, எதிர்காலத்தில் மக்கள் மகிழ்வோடு வாழ அடிப்படை காரணமாய் இருக்க முடியும் என்பது எவ்வளவு பெரிய காரியச்சிந்தனை!
எழுதிக் கொண்டிருக்கும் மனு வரையுங்கலை நூலிலிருந்து…
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.