//இலங்கையில் நடந்த படுகொலை தொடர்பாக விசாரணை செய்ய ஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம், இலங்கையில் நடந்தது போர் குற்றமன்று. திட்டமிட்ட இனப்படுகொலை என உறுதிசெய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இது உலக நாடுகளின் சம்மதம் இல்லாமல் நடக்கவில்லை என்றும், அமெரிக்காவும் கூட இராணுவ ஒத்துழைப்பு அளித்திருக்கிறது என்றும், சர்வதேச மனித உரிமைகள் நாளான 10-12-2013 அன்று தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்க நாட்டா(ண்)மை என்கிற தலைப்பில் நான் வெளியிட்ட இக்கட்டுரையை நினைவு கூர்ந்து மீள்பதிவு செய்கிறேன்.//
ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் குறித்து, ஐக்கிய நாடுகளின் சபையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே கிளர்ச்சி எழுந்துள்ளது.
இதன் முதற்கட்டமாக கடந்த சில நாட்களாகவே கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆதலால், கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் அனைத்துமே காலவரையின்றி மூடப்பட்டு விட்டன.
கடந்த வாரம் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஆராய்ச்சிக்காக வந்த புத்த மத துறவி ஒருவரும், நேற்று 18-03-2013 அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்திறங்கிய புத்த மத துறவி ஒருவரும், ஈழத் தமிழ் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த காணொலி காட்சிகளை ஒளி ஊடகங்கள் பெருமையோடு பரப்பியதில், மொழி தெரியாத இடத்திற்கு சென்றுள்ள நம்மை ஒரு கும்பல் திடீரென சூழ்ந்து கொண்டு தாக்கினால், நமக்கு என்ன நிலைமை ஏற்படும் என்பதை உணரும் தன்மையுள்ள அகில உலக மனிதாபிமானிகளை கொதிப்படைய செய்துள்ளது.
இதற்கிடையில், இன்று 19-03-2013 காலையில், இதுவரை (சுமார் கடந்த ஒன்பது ஆண்டுகளாக) மத்திய அரசுக்கு அளித்து வந்த தனது ஆதரவை விலக்கி கொள்வதாகவும், 21-03-2012 க்குள் இது குறித்து பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், தனது முடிவை மறு பரிசீலனை செய்யும் என்று செய்தியாளர்களை கூட்டி விளக்கி, திருவாய் மலர்ந்து உள்ளார், திரு.கருணாநிதி.
இவைகள் எல்லாம் ஒருவன் வாழும் போது தண்ணீர் கொடுக்காதவர்கள், அதன் செத்த பிறகு பாலூற்றி, வாய்க்கு அரிசி போடும் வெற்றுச் சம்பிரதாய சடங்குகளாகவே உள்ளது. இதனை மத்திய அரசும் தங்களது ஆட்சிக்கு எந்த இழப்பும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.
உண்மையில் மத்திய அரசுக்கான ஆதரவை திரு.கருணாநிதி போர் குற்றங்கள் நடைபெற்ற அந்த கால கட்டங்களிலேயே செய்திருக்க வேண்டும்.
மத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்த போது செய்யாமல், தனது முதல்வர் பதவிக்கும், சொந்த பந்தங்களின் மத்திய அமைச்சர் பதவிக்கும் ஆசைப்பட்டு, பல லட்சம் பேரை ஈவிறக்கமின்றி கொலை செய்ய அனுமதித்து விட்டு, அடிக்க வேண்டிய கோடிகளை கொள்ளையடித்து விட்டு, தற்போது ஆதரவை விலக்கி கொள்கிறேன் என்று நீலிக்கண்ணீர் வடிப்பதால், படுகொலை செய்யப்பட்ட தொப்புள் கொடி உறவுத் தமிழர்கள் எல்லாம் உயிரோடு வந்து விடுவார்களா என்ன?
ஏனிந்த ஆதரவு விலகல் கபட நாடகம் என்பதும் கூட போகப்போக புரிந்து விடும். அதுவரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சரி, ஈழத்தமிழ்கள் என் தொப்புள் கொடி உறவுகள் என சொல்லிக் கொள்பவர்கள், உலகில் பல கோடி தமிழர்கள் இருந்தாலும், அவர்களில் எவருமே தமிழர்களுக்கு தலைமை தாங்கும் தகுதியற்றவர்கள் போலவும், ஆதலால், தங்களைத் தாங்களே தமிழனத் தலைவர்கள் என அறிவித்துக் கொண்ட அற்பர்கள், போரின் போது தன் உயிரை துறந்தாகிளும் காத்திருக்க வேண்டிய ஈழத் தமிழர்களை, தற்போது அற்பமானதாக தெரியும் மத்திய அமைச்சர் பதவியை துறந்து கூட காப்பாற்ற முன்வரவில்லையே ஏன் என்று யோசித்தீர்களா?
அப்படி காக்கப் போய், ஒருவேளை தமிழ் ஈழம் மலர்ந்து விட்டால், உலகத் தமிழர்களுக்கெல்லாம் மாவீரன் பிரபாகரன் தலைவனாகி விடுவான், நாற்பதாண்டு காலமாக தமிழ்நாட்டில், தமிழர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வரும் நாமும், நம் பரம்பரையும் டம்மியாகி விடுவோம் என்கிற ஆதிக்கப்பதவி ஆசை வெறியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
ஆனால், பதவி ஒருபோதும் நிரந்தரமல்ல; பட்டமே நிரந்தரமானது என்பதற்கு இணங்க, ‘‘தமிழின துரோகி’’ என்கிற பட்டமல்லவா கொடுக்கப்பட்டு விட்டது!
எதிர்கால தூண்களான மாணவர்களுக்கு ஆர்ப்பாட்டம் என்கிற பெயரில், சட்டத்துக்கு உட்படாத தவறான போராட்ட முறைகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதன் விபரீத விளைவுகளை எதிர்காலத்தில் அம்மாணவர்களும், நாமுமேதாம் சேர்ந்து அறுவடை செய்ய வேண்டியிருக்கும். எச்சரிக்கை!
தங்களை ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் என சொல்லிக் கொண்டு அடிதடியில் இறங்கும், தங்களை வீரனாக காட்டிக் கொள்ள விரும்பும் அடாவடி அடிதடி தமிழர்கள், நம்மை நம்பி அப்பாவியாய் வரும் சிங்கள இனத்தவரையோ அல்லது புத்த மத துறவிகளையோ தாக்குவது என்பது அநாகரீகமான மனித உரிமையை மீறிய செயல்.
அப்படிப்பட்ட ஒருவரை நாம் இங்கு தாக்க போய், நம்மைப் போலவே சிங்களத்தவர்களும் இலங்கையில் தாக்க ஆரம்பித்தால், அதிகமாக பாதிக்கப்பட போவது, ‘‘பிய்ந்து போன சதை பிண்டங்களுடன், குத்துயிரும், கொலை உயிருமாய், நமக்கு எப்படி சாவு வரும் என சாவை எதிர் நோக்கி வாழ்ந்து வரும் மீதமுள்ள ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான நம் அப்பாவி தமிழர்களே!’’ என்பதை உணர வேண்டும்.
மேலும், தமிழினப் படுகொலைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாய் இருந்த, இருந்து வருகின்ற, நம்மோடே வசித்து வருகின்ற தன் இன துரோகி தமிழர்களிடமும், தமிழின துரோகி இந்தியர்களிடமும் முடிந்தால், மாவீரன் பிரபாகரனைப் போன்று இலங்கைக்கே சென்று கொலைக்கார ராஜபக்ஷேவுடனும், சிங்கள ராணுவத்திடமும்தாம் நேரடியாக மோத வேண்டுமே தவிர, நம்மை நம்பி வரும் சிங்கள அப்பாவிகளிடம் அல்லவே அல்ல.
அப்படி மோதுவது உலக சமுதாயத்தில், நமக்குநாமே தேடிக் கொள்ளும் காலத்தால் அழிக்க முடியாத இழுக்கேயாகும்.
மொத்தத்தில் அறிவுப்பூர்வமாக பொங்கி எழ வேண்டுமே தவிர, உணர்ச்சி பூர்வமாக பொங்கி எழ கூடாது. அப்படி எழுந்தால் இறுதியில் நாம்தான் அடங்க வேண்டியிருக்கும். இப்படி பல முறை எழுத்ததன் பயனாய்தான், தனித்து எதையுமே செய்ய இயலாத நிலையிலும், முடிவெடுக்க முடியாத நிலையிலும், இன்றும் அடிமைப்பட்டு, மற்றவர்களின் ஆதரவுக்கு கையேந்தி நிற்கிறோம்.
நாம் எப்போது அறிவுப்பூர்வமாக பொங்கி எழுகிறோமோ அப்போது மட்டுமே, அமெரிக்காவைப் போல எவரையும் ஆட்டிப் படைக்க முடியும் என்பதோடு, நாட்டா(ண்)மை செய்யும் வல்லமையையும் பெற முடியும்.
ஆம்! போர் நடந்த போது, கொத்து கொத்தாக குண்டு மழை பொழிந்து, தமிழர்களை குன்றுபோல் கொன்று குவித்து போட்ட போது, போரை நிறுத்து என்று இலங்கையை எச்சரிக்காது, மௌனியாய் இருந்த அமெரிக்காவுக்கு, இப்போது மட்டும் மனித உரிமை மீறல் குறித்து தீர்மானம் கொண்டு வர என்ன யோக்கியதையும், அக்கறையும் இருக்கிறது என்பதைப் பற்றி நாம் சற்றேனும் சிந்திக்க வேண்டாமா?
அமெரிக்காவின் ஏகாதிபத்திய மற்றும் எதேச்சை அதிகார எதிர்பாளர்களான, பெரும்பாலான தமிழ் இன உணர்வாளர்களே, அமெரிக்கா கொண்டு வரும் மனித உரிமை தீர்மானத்தின் உண்மையான சூழ்ச்சியை புரிந்து கொள்ளாமல், உணர்ச்சி வயப்பட்டும், மதி இழந்தும், ராஜபக்ஷே மீது கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என கூப்பாடு போடுவதேன்?
ராஜபக்ஷே செய்த போர் குற்ற படுகொலைகளுக்கு ஆயுதங்கள் வழங்கியும், சிங்கள இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்தும் ஊக்குவித்த தமிழின துரோகி இந்தியர்களையும், இவ்விந்தியர்களுக்கு அரசியல் ரீதியாக ஆதரவுக்கரம் நீட்டிய தன் இன, தமிழ் துரோகிகளையும் அப்படுகொலை போர் குற்றத்தில் சேர்த்து விசாரணை செய்ய வேண்டும் என கோராதது ஏன்?
எதிரிகளை கூட மன்னிக்கலாம். ஏனெனில், அவன் தன்னை எதிரி என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டே அதற்கான வேலைகளில் ஈடுபடுகிறான். ஆனால், நான் உன் இனம், நீ என் இரத்த சொந்தம், தொப்புள் கொடி உறவு என்றெல்லாம் வியாக்கியானம் பேசி கூடவே இருந்து குழி பறித்த, நம்ப வைத்து கழுத்தறுத்த தமிழின துரோகிகளை மன்னிக்கலாமா?
இப்படியொரு மனித உரிமை மீறல் தீர்மானத்தை அமெரிக்கா மட்டும்தாம் கொண்டு வர முடியுமா... ஐநாவில் அங்கம் வகிக்கும் மற்ற எந்த நாடும் கொண்டு வர முடியாதா... அந்நாடுகளை கொண்டு வாருங்கள் என நாம் கோர முடியாதா... ஐக்கிய நாடுகள் சபையே சுய விருப்ப அடிப்படையில் கொண்டு வர கோரிக்கை விடுக்க முடியாதா என்பதைப் பற்றியெல்லாம் நாம் சிந்திக்க வேண்டும். ஏன் தெரியுமா?
நுண்ணறிவு இல்லாத நூல்கள் என்கிற தலைப்பு கட்டுரையில், எனது நெருங்கிய நண்பர்கள் இருவர், அவர்களது நூல் வெளிவருவதற்கு எனது அறிவுப்பூர்வமான ஒத்துழைப்பை கேட்டார்கள். நானும் சமுதாயத்திற்கு இரண்டு நல்ல நூல்கள் வெளிவருகிறதே என்ற ஆர்வத்தில் உதவி செய்தேன். ஆனால், “ஒருவரோ இருக்க கூடாத பொய்யான விசயங்கள் இருக்க வேண்டும் என்றார். மற்றவரோ, நூலின் மையக்கருவே, நூலில் இருக்க வேண்டாம்” என்றார் என்று சொல்லியிருந்தேன் அல்லவா?
இதில் இரண்டாவதாக குறிப்பிட்டுள்ள நூலில், ‘‘ஒப்பற்ற நாடகம்’’ என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள....
‘‘அமெரிக்கர்கள் எந்த நாட்டை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்பினாலும், அந்த நாட்டின் தேவைகளை, அவர்களே பட்டியலிட்டு, மனிதாபிமானம் என்ற போர்வையில், வலியச் சென்று உதவிகளை செய்து கொண்டே, குழப்பங்களையும் உருவாக்குவார்கள். அக்குழப்பத்தை போக்க அவர்களே மத்தியஸ்தர்களாக வந்து, அப்பிரச்சினைகளை தீர்த்தும் வைப்பார்கள்.
இதற்கு பிரதி பலனாக அந்த நாட்டில் இருந்து தொடர்ந்து வருமானம் வரக் கூடிய ஒரு வழியையும், அந்நாட்டவர்களே செய்து தரும்படி செய்து கொள்வதுதாம், அவர்களது ராஜதந்திரம்.
இதுபோன்று மக்களை அடிமைப்படுத்தும் அவர்களுடைய செயல்களுக்கு பேருதவியாய் இருப்பது, மக்களிடம் உள்ள இறை தன்மை பற்றிய அறியாமையும், புகழ் போதையுமேதாம்!’’
என்கிற இக்கருத்தையே இத்தலையங்கத்தின் மூலக் கருத்தாக பதிவு செய்கிறேன்.
தற்போது இலங்கை மீது மனித உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்துள்ள அமெரிக்க நாட்டா(ண்)மையின் கணக்கு, இக்கருத்தோடு ஒத்துப் போகிறதா என்பதை சரி பார்த்து, அறிவுப்பூர்வமாக முடிவை மேற்கொள்ளுங்கள், அன்புத் தமிழர்களே!
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment