கோல் எடுத்தால் குரங்கு ஆடும் என்பது பழமொழி.
சட்டத்தை கையில் எடுத்தால், அரசு ஊழியர்கள் ஆடுவார்கள் என்பது புதுமொழி.
நீதியைத்தேடி... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! குற்ற விசாரணைகள் நூலில் தன்மீது விருதுநகர் மாவட்டம், சிவகாசி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க, அவ்வழக்கில் வீட்டில் இருந்தபடியே அஞ்சல் மூலம் பதிலுரை தாக்கல் செய்து தள்ளுபடி செய்ததாக ஆசிரியர் வாரண்ட் பாலா தெரிவித்து இருந்தார்.
அவருக்கு சாத்தியப்பட்ட சட்டம் நமக்கு மட்டும் எப்படி சாத்தியமில்லாமல் போகும்? முயன்றால் தானே முடியும்? முடியும் என்பது என் அனுபவம்.
பொதுவாக வாடகைக்கு வீடு கொடுப்பவர்கள் கேட்பவரின் தராதரம் பார்த்துதான் கொடுப்பாங்க. கொஞ்சம் அப்படி இப்படி என எதிர்கேள்வி கேட்பான் என்று தெரிந்தால் கூட, வில்லங்கமான பேர்வழி என்று கூறி வீடு கொடுக்க மாட்டார்கள்.
அதிலும், வக்கீல், போலீசுக்கு கொடுக்கவே மாட்டார்கள்.
ஆனால், ‘‘நமக்குதான் சட்ட விழிப்பறிவுணர்வு இருக்கிறதே! நம்மிடம் சட்டத்துக்கு புறம்பாக யார் என்ன செய்து விட முடியும்?’’ என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் எனது மனைவி பெயரில் உள்ள வீட்டின் கீழ்தளத்தை கடலூர் மாவட்ட காவல் துறை சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு வாடகைக்கு விட்டிருந்தேன்.
கீழ்தளம் அவர்களுக்கு விடப்பட்டதால் காவல்துறையினரின் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த பெரும் பகுதியை உபயோகித்து வந்தார்கள். எனது ஒரே மோட்டார் சைக்கிளையும் அங்குதான் நிறுத்த வேண்டும்.
இதற்காக ஐம்பது சதவிகித வாடகையை கழித்து கொண்டார்கள். பல வாகனங்களை நிறுத்துவதற்கும் ஒரே ஒரு வாகனத்தை நிறுத்துவதற்கும் சம அளவில் வாடகை என்பது எப்படி நியாயமாகும்?
கட்டிடத்திற்கான வாடகை ஆண்டு ஒன்றுக்கு ஐந்து சதம் வீதம் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பதினைந்து சதவிகித தொகை உயர்த்தி தரப்பட வேண்டும் என்பது அரசாணை. இப்படி உயர்த்தப்படும் போது கூடுதலாக மாதம் ஒன்றுக்கு ரூ 604 கூடும்.
ஆனால், நமக்கான சட்டப்படியான கூடுதல் வாடகைக்கு கூட பிச்சை போட்டால்தான் கொடுப்பார்கள். நமக்குத்தான் பிச்சை போடும் பழக்கம் அறவே கிடையாதே. மாறாக, சட்டப்படி அறிவிப்பு அனுப்புவதுதானே பழக்க வழக்கம்.
இந்த வகையில் முதலில் வாடகை உயர்வை பரிசீலிக்க கோரி சாதாரண முறையில் கடிதம் அனுப்பினேன். அதனை பரிசீலனை செய்த பொதுப்பணித்துறை வழங்க இயலாது என பதில் அனுப்பவே நமது ஆயுதமான சாட்சிய சட்டம் உறுபு 76 கையில் எடுக்க வேண்டியதாயிற்று.
சும்மாவா சொன்னாங்க, ‘‘கோல் எடுத்தால் குரங்கும் ஆடும்னு’’. இதுபோல, நாம் சட்டத்தை கையில் எடுத்தால்தான் அரசு ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு தங்களின் கடமையைச் செய்யிறாங்க.
முதலில் சாதாரணமாக சாட்சிய சட்டம் 76 இன் கீழ் சான்று நகல் கோரிய போது கண்டு கொள்ளவே இல்லை என்பதால் மீண்டும் ஒருமுறை சான்று நகல் அனுப்ப வேண்டியதாயிற்று.
இந்த முறை கொஞ்சம் புத்திசாலித்தனமாக சான்று நகலின் நகலை உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908 இன் விதி 90 இன் கீழ், மாவட்ட நீதிபதிக்கு சமர்ப்பித்தேன். இதனால் மிரண்டு போன பொதுப்பணித்துறை எனது சான்று நகல் கோரிய மனுவிற்கு பதில் அளித்தது. அதுவும் எப்படி?
நான் என்னென்ன கேள்வி கேட்டிருந்தேனே அதைக் குறிப்பிட்டு அதற்கு கீழே பதில் என்ற வகையில். கூடவே கேட்டிருந்த ஆதாரங்களை எல்லாம் இணைத்திருந்தார்கள்.
ஆனாலும், ‘‘குப்பற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டவில்லை’’ என்கிற கதையா விளக்கம் தந்தாங்களே ஒழிய வாடகையை கூட்டவில்லை.
மாறாக, உயர் அதிகாரிக்கு விளக்கத்தின் நகலை அவர்களே அனுப்பியிருந்தார்கள். ‘‘பொறுத்தது போதும், பொங்கி எழு’’ என்ற வகையில் உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908 இன் விதி 80 இன் கீழ் சட்டப்படியான எனது உரிமையைப் பெற பொதுப் பணித்துறை மீது உரிமையியல் வழக்கு தொடுக்க போகிறேன் என்று மாவட்ட ஆட்சியருக்கு அறிவிப்பு அனுப்பி அதன் நகலை பொதுப்பணித்துறைக்கு சமர்ப்பித்தேன்.
உடனே வாடகையை உயர்த்தி பொதுப்பணித்துறையால் முறையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கூடவே வாகனங்கள் நிறுத்துவதற்கு அவர்களின் பங்காக 90 சதவிகிதமும் கிடைத்தது.
இவைகள் எல்லாம் ஓரிரு மாதங்களில் நடந்து முடிந்தது.
இதையே பொய்யர்களிடம் கொண்டு சென்றிருந்தால், வாடகை உயர்வை இந்த ஜென்மத்தில் வாங்கியிருக்க முடியாது என்பதோடு, அப்பொய்யர்களுக்கு கூலி கொடுக்க அவ்வீட்டையே விற்று இருக்க வேண்டும்.
எப்படி நம்ம நீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு!
உங்களின் அறிவார்ந்த கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ள உலாபேசி எண் இராஜ.அப்பாஜி 9444516741
மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் தன்னார்வலர்களின் நிதியுதவியுடன் வெளிவர இருக்கிற கடமையைச் செய்! பலன் கிடைக்கும் நூலின், வாசகர்களின் (மெ, பொ)ய்யறிவும் பகுதியில் இருந்து...
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
congrats sir!!!
ReplyDelete